தாலுகா அலுவலகங்களில் புரோக்கர்கள்...ஆதிக்கம்: கமிஷன் இன்றி சான்றிதழ் கிடைப்பது அரிது
திருவாலங்காடு:தாலுகா அலுவலகத்தில் ஜாதி, இருப்பிடம், வருவாய், பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்க தாமதம் ஏற்படுவதாகவும், புரோக்கர்கள் வாயிலாக சென்றால் சான்றிதழ் உடனடியாக கிடைப்பதாக, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, பூந்தமல்லி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆவடி உள்ளிட்ட ஒன்பது தாலுகாக்களில், 792 வருவாய் கிராமங்களில், 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.வருவாய்த் துறை சார்பில், மக்களுக்கு தேவையான ஜாதி, இருப்பிடம், வருமானம், முதல் பட்டதாரி, வாரிசு சான்றிதழ், பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற ஆன்லைனில் விண்ணப்பித்து, படிவங்கள் சரிபார்க்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது, அரசு பொதுத் தேர்வுகள் முடிந்துள்ள நிலையில், உயர் கல்விக்கு செல்லும் மாணவர்கள் ஜாதி, வருமானம், இருப்பிட சான்றுகள் பெற்று விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர்.மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகத்தில் சான்று பெற விண்ணப்பங்களுடன் உரிய ஆதாரங்களையும் இணைத்து இருந்தாலும், ஏதேனம் காரணங்கள் கூறி தள்ளுபடி செய்வது, மனுக்களை கிடப்பில் போடுவது, மனுதாரர்களை அலைக்கழிப்பு செய்வதும் தொடர்கிறது.விண்ணப்பதாரர்கள் சில அலுவலர்களை 'கவனித்தால்' மட்டுமே சான்றிதழ்கள் பெற முடிகிறது. பெரும்பாலும் பட்டா பெயர் மாறுதல், கூட்டு பட்டாக்களில் இந்த நிலை உள்ளது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்படும் சான்றிதழ்கள், பொதுமக்களுக்கு 16 நாட்களில் தீர்வு கண்டு, சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.நீண்ட நாள் நிலுவையில் இல்லாததை உறுதி செய்யவும், காரணமின்றி தள்ளுபடி செய்வதை தவிர்க்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சான்றிதழ் வழங்க தாமதம்
'இ - --சேவை' மையங்களில் சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கப்படுகின்றன. சில வி.ஏ.ஓ.,க்கள் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து, தீர்வு காண்பதில் தாமதம் செய்கின்றனர். இவர்கள் விண்ணப்பங்களை நிராகரித்து, ஆர்.ஐ.,க்கு பரிந்துரை செய்கின்றனர். வி.ஏ.ஓ., நிராகரிப்பு காரணத்தை, ஆர்.ஐ.,யும் கண்டறியாமல் நிராகரிக்கின்றனர். தாலுகா அலுவலகத்தில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களை புரோக்கர்கள் பேரம் பேசி முடித்து கொடுக்கின்றனர். முன்பிருந்த ஆர்.டி.ஓ.,க்கள், வாரம் ஒருமுறை விண்ணப்பங்கள் நிராகரிப்பு காரணங்களை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேட்டறிந்ததால், சான்றிதழ் தாமதம் இன்றி கிடைத்தது. அதேபோல், தற்போது பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர் ஆர்.டி.ஓ.,க்கள், தாலுகா அலுவலகம் வந்து செல்ல வேண்டும்.
16 நாட்களில் சான்றிதழ் கிடைப்பதில்லை
தாலுகா அலுவலகத்தில் விண்ணபித்த 16 நாட்களுக்குள் சான்றிதழ் கிடைப்பதில்லை. சான்றிதழ் பெற ஒரு மாதத்திற்கு மேலாகிறது. தேவையில்லாமல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. தற்போது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, பள்ளி, கல்லூரியில் உயர்கல்வி பயில ஜாதி, வருவாய், முதல் பட்டதாரி உள்ளிட்ட சான்றிதழ்கள் தேவைப்படும். மாணவர்களின் தேவையை அறிந்து, புரோக்கர்கள் பணம் சம்பாதிப்பது அதிகம் நடந்து வருகிறது. இதை தடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமதம் இன்றி சான்றிதழ் வழங்க வேண்டும்.- எம்.மாரியம்மாள், திருவாலங்காடு.