பார்க்கிங் ஏரியாவாக மாறிய சோதனைச் சாவடி மையம்
திருமழிசை: திருமழிசை பகுதியில் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை காவல் சோதனை சாவடி மையம் பூட்டியே கிடப்பதால் இரு சக்கர வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளது. திருமழிசை பகுதியில் ஆவடி மாநகர காவல் ஆணையரகம் பூந்தமல்லி காவல் சரகத்துக்குட்பட்ட வெள்ளவேடு காவல் நிலைய வாகன சோதனைச் சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை வழியே தினமும், 50,௦௦௦த்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு குண்டுமேடு பகுதியில் உள்ள காவல் சோதனைச் சாவடியில் இரவு மட்டும் வெள்ளவேடு காவல் நிலைய போலீசார் பணி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் பகல் நேரங்களில், இந்த சோதனைச் சாவடி மையம் பூட்டியே கிடப்பதால் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருமழிசை பகுதியில் உள்ள வெள்ளவேடு காவல் நிலைய சோதனை சாவடியை, 24 மணி நேரமும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.