நந்தியாற்றில் மேம்பாலம் அமைக்க செருக்கனுார் மக்கள் எதிர்பார்ப்பு
திருத்தணி: நந்தியாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என, செருக்கனுார் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருத்தணி ஒன்றியம் செருக்கனுார் ஊராட்சியில், செருக்கனுார் மற்றும் காலனி, ராமகிருஷ்ணாபுரம், சாமந்திபுரம், ராஜூலுகண்டிகை ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு இடையே நந்தியாறு செல்கிறது. இந்நிலையில், செருக்கனுார் கிராமத்தில் இருந்து ராமகிருஷ்ணாபுரம், சாமந்திபுரம், ராஜூலுகண்டிகை உள்ளிட்ட கிராமங்களுக்கு, நந்தியாற்றை கடந்து தான் வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் செல்ல வேண்டும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், செருக்கனுார் - சாமந்திபுரம் இடையே நந்தியாற்றின் குறுக்கே தரைப் பாலம் கட்டப்பட்டது. மழைக்காலத்தில் பெய்யும் கனமழையால், ராணிப்பேட்டை மாவட்டம் பொன்னை மற்றும் சோளிங்கர் ஏரிகள் நிரம்பி வெளியேறும் தண்ணீர், நந்தியாற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடும். செருக்கனுார் - சாமந்தி புரம் இடையே கட்டப்பட்ட தரைப் பாலத்தின் மீது, 5 அடி உயரத்திற்கு வெள்ளம் செல்வதால், மக்கள் ஆற்றை கடக்க முடியாமல், 10 கி.மீ., சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, நந்தியாற்றில் மேம் பாலம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.