ஓடும் ரயிலில் தினசரி சாகச பயணம் கல்லுாரி மாணவர்கள் அட்டூழியம்
திருவள்ளூர்:திருவள்ளூரிலிருந்து, சென்னை சென்ட்ரல் செல்லும் ரயிலில், மாணவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர். திருவள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பகுதிவாசிகள் வேலை, வியாபாரம் உட்பட பிற பணிகளுக்கு, சென்னைக்கு செல்வதற்கு பெரும்பாலும் புறநகர் மின்சார ரயில்களை பயன்டுத்தி வருகின்றனர். இதில், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், காலை மற்றும் மாலை நேரங்களில், அதிக அளவில் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், 'ரூட் தல' என்ற பெயரில், கல்லுாரி மாணவர்கள் ரயில் படிக்கட்டுகளில் தொங்கியும், ரயில் மீது ஏறியும் ஆபத்தான முறையில் பயணம் செய்வது தொடர்கிறது. அது மட்டுமின்றி, ரயில் பயணியரை அச்சுறுத்தும் வகையில், அடிக்கடி ரகளையில் ஈடுபடுவதும், கத்தியை நடைமேடைகளில் உரசி செல்வதுமாக, ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், ரயில்வே காவல் துறை சார்பில், ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்ட நிலையிலும், மாணவர்கள் அதை பொருட்படுத்தாமல் ரயில் பயணியரை அச்சுறுத்தி வருகின்றனர். நேற்று காலை, திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் சென்ற ரயிலில் பயணித்த கல்லுாரி மாணவர்கள், செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து, வேப்பம்பட்டு, திருநின்றவூர் ரயில் நிலையங்களில் ரயிலின் மேல் ஏறி அட்டூழியம் செய்தனர். பயணியரை அச்சுறுத்தும் வகையில் கூச்சலிட்டுக்கொண்டு, நடைமேடையில் கால்களை உரசியபடி ஆபத்தாக பயணித்தனர். எனவே, பயணியர் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், தொடர்ந்து இது போன்ற அட்டூழியங்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது, ரயில்வே நிர்வாகமும், போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்திஉள்ளனர்.