பருவ மழை துவக்கம் வருவாய் துறை ஊழியர்களுக்கு ஆர்.டி.ஓ., உத்தரவு
திருத்தணி:திருத்தணியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணி முதல் தொடர்ந்து துாறல் மழையும் அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. வருவாய் கோட்டாட்சியர் தீபா, மழை பாதிப்புகள் குறித்து அவ்வப்போது வருவாய் துறை ஊழியர்கள் உள்பட அனைத்து துறை அதிகாரிகளிடமும் கேட்டு அறிந்து வருகிறார்.கோட்டாட்சியர் தீபா கூறியதாவது:திருத்தணி கோட்டத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பருவ மழை குறையும் வரை, அந்தந்த கிராமங்களில் தங்கியிருக்க வேண்டும். பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து, மக்களை பாதுகாக்க வேண்டும். எனவே வருவாய் துறை ஊழியர்கள் அலட்சியமாக செயல்படக்கூடாது. தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.