உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  வங்க கடலில் புயல் எச்சரிக்கை மீனவர்கள் தொழில் தவிர்ப்பு

 வங்க கடலில் புயல் எச்சரிக்கை மீனவர்கள் தொழில் தவிர்ப்பு

பழவேற்காடு: வங்க கடலில் ஏற்பட்டு உள்ள புயல் எச்சரிக்கை காரணமாக கடல் சீற்றத் துடன் இருப்பதால், பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடி தொழிலை தவிர்த்துள்ளனர். பழவேற்காடு மீனவ பகுதியில், 35 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் கடல் மற்றும் ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், தமிழக கடலோர பகுதிகளில், மணிக்கு, 45 - 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 'திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதி மீனவர்கள், மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்படி தொழிலுக்கு செல்ல வேண்டாம்' என, மீன்வளத் துறை அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து மீனவர்கள், இரு நாட்களாக மீன்படி தொழிலுக்கு செல்வதை தவிர்த்துள்ளனர். மீனவர்களின் படகுகள் கரையோரங்களில் ஒய்வெடுக்கின்றன. வலைகள், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கூறியதாவது: சில நாட்களாகவே கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மீன்வளத் துறையும் எச்சரித்து உள்ளது. அதனால், தொழிலுக்கு செல்வதை தவிர்த்துள்ளோம். வருவாய் இல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளோம். புயல் எச்சரிக்கை முடிந்து, மீண்டும் தொழிலுக்கு செல்லும் வரை வாழ்வாதாரம் பாதிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ