ஒரத்துாரில் விவசாய நிலத்திற்கு செல்லும் தார்ச்சாலை சேதம்
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், ஒரத்துார் கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், விவசாயத்தை நம்பியே உள்ளனர்.பெரும்பாலான விவசாய நிலங்கள் சித்தேரி ஒட்டி பெரியகளக்காட்டூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இங்கு ஒரத்துார் மற்றும் பெரியகளக்காட்டூர் என இரு கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் 800 ஏக்கர் நிலத்தில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர்.விவசாயிகள் பயன்படுத்தும் ஒரத்துார் --- பெரியகளக்காட்டூர் வரையிலான சித்தேரி வழியாக உள்ள 2.5 கி.மீ., தார்ச்சாலை கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லி பெயர்ந்து சேதமடைந்து உள்ளது.இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு சென்று வர சிரமப்படுவதாகவும், விவசாய இடுப்பொருட்கள் மற்றும் விளைந்த நெல்லை கொண்டு செல்ல சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.எனவே விரைந்து தார்ச்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.