லட்சுமிபுரம் அணைக்கட்டில் பார்வையாளர் மாடம் சேதம்
பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஆலாடு - லட்சுமிபுரம் கிராமங்களுக்கு இடையே, ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால், பல்வேறு பகுதிகளில் இருந்து கால்வாய்கள் வாயிலாக ஆற்றிற்கு நீர்வரத்து இருக்கிறது.கடந்த, 17 ம் தேதி முதல் அணைக்கட்டு நிரம்பி வழிகிறது.அணைக்கட்டில் இருந்து, வினாடிக்கு, 1,200 கன அடி உபரிநீர் வெளியேறி ரெட்டிப்பாளையம் தடுப்பணையை நோக்கி செல்கிறது.ஆலாடு பகுதியில் அணைக்கட்டு ஷட்டர் அருகே, நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பார்வையிடுவதற்காக இரும்பு மாடம் அமைக்கப்பட்டு உள்ளது.தற்போது இது துருப்பிடித்து ஓட்டை உடைசல்களுடன் சேதம் அடைந்து இருக்கிறது. அணைக்கட்டு நிரம்பியதை தொடர்ந்து, அதை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் அங்கு குவிந்து வருகின்றனர். அவர்கள் சேதம் அடைந்துள்ள மாடத்தில் நின்று செல்பி எடுப்பது, அணைக்கட்டை ரசிப்பது என உள்ளனர்.அதிகப்படியான நபர்கள் சேதம் அடைந்த பகுதியில் நிற்கும்போது, அது மேலும் பலவீனம் அடைந்து உடைந்துவிடும் அபாயம் உள்ளது. இதனால், பார்வையாளர்கள் அசம்பாவிதங்களில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.மேலும், நீர்வளத்துறையினரும் அணைக்கட்டில் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள செல்லும்போது சிரமங்களுக்கு ஆளாக நேரிடும்.அதை தவிர்க்க, சேதம் அடைந்து பகுதியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.