தொழுதாவூர் சாலை சேதம் பகுதி மக்கள் சிரமம்
திருவாலங்காடு:ராஜபத்மாபுரம் --தொழுதாவூர் சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர். திருவாலங்காடு ஒன்றியம் ராஜபத்மாபுரம் -- தொழுதாவூர் வரையிலான 2 கி.மீ., சாலை மண் சாலையாக இருந்தது. பழையனுார், ஜாகீர் மங்கலம், ராஜபத்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு ரயில் நிலையம் செல்ல வேண்டி இருந்ததால் அச்சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒன்றிய பொது நிதியில் 27 லட்சம் ரூபாயில் இந்த சாலை, ஜல்லி, முறம்பு மண் கொட்டப்பட்டு மெட்டல் சாலையாக அமைக்கப்பட்டது. தற்போது மண், பெயர்ந்து ஜல்லி சாலையாகவும், பள்ளம் மேடாகவும் காட்சியளிக்கிறது. இதனால் வாகன போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இச்சாலை உள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளதால் சேதமடைந்த சாலையை தார்ச்சாலையாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.