சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட நெடுஞ்சாலையில், சரக்கு வாகனங்களில் பகுதிமக்கள் ஆபத்தாக பயணம் செய்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.கடம்பத்துார் ஒன்றியத்தில் உள்ள நெடுஞ்சாலையில், சரக்கு வாகனங்களில் பகுதிமக்கள் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வேலைக்கு செல்லும் உள்ளூர், வெளியூர் தொழிலாளர்கள் மற்றும் திருமணம் போன்ற நிகழ்ச்சிக்கு செல்வோர், சரக்கு வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், சரக்கு வாகனத்தில் உள்ள பொருட்களின் மேல் அமர்ந்து, ஆபத்தான வகையில் பயணம் செய்து வருகின்றனர். ஆங்காங்கே, வாகன சோதனையில் ஈடுபடும் போலீசாரும், இவற்றை கண்டுகொள்ளாததே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.எனவே, சரக்கு வாகனங்களில் மக்களை ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.