ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை வரும் 30 வரை கால அவகாசம்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,க்களில் மாணவர் சேர்க்கை, வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பிக்க, வரும் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டும். இதற்காக, அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. கலந்தாய்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விபரம், அதே இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.