உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / யுகாதி பண்டிகை கொண்டாட்டம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

யுகாதி பண்டிகை கொண்டாட்டம் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்வர். நேற்று தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகையை ஒட்டி, ஆந்திராவில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரயில், பேருந்து மற்றும் கார் போன்ற வாகனங்களில் திருத்தணிக்கு வந்தனர்.நேற்று வார விடுமுறை என்பதால், வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.முன்னதாக, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டன.

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் யோக நரசிம்மர் மலைக்கோவில் அமைந்துள்ளது. நேற்று யோக நரசிம்மர் மலைக்கோவில் மற்றும் சோளிங்கர் பக்தோசித பெருமாள் கோவில்களில் சிறப்பு உத்சவம் நடந்தது.காலை 9:00 மணி முதல் யோக நரசிம்மர் மலைக்கோவிலுக்கு செல்ல ஏராளமான பக்தர்கள், ரோப்கார் வளாகத்தில் குவிந்திருந்தனர். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

ஊத்துக்கோட்டை

ஊத்துக்கோட்டை அடுத்த ஆந்திர மாநிலம், சுருட்டப்பள்ளி கிராமத்தில் சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில், மூலவர் வால்மிகீஸ்வரர், அன்னை மரகதாம்பிகைக்கு சிறப்பு பூஜை நடந்தது.இந்த ஆண்டிற்கான பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. ஆந்திர மாநில கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள், குடும்பத்துடன் சென்று சுவாமியை தரிசனம் செய்தனர். அதேபோல், நாகலாபுரம் வேதநாராயணசுவாமி கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை