பழவேற்காடு டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய எதிர்பார்ப்பு
பழவேற்காடு:பழவேற்காடு பஜார் பகுதியில் பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணியருக்கும் இடையூறாக உள்ள 'டாஸ்மாக்' கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழவேற்காடு பஜார் பகுதியில், டாஸ்மாக் மதுபான கடை செயல்படுகிறது. பழவேற்காடு மீனவ பகுதியை சுற்றியுள்ள, 30 கிராமங்களைச் சேர்ந்தவர்கள், வெளியிடங்களில் இருந்து வருவோர் என, எப்போதும் கடையில் அதிகளவில் கூட்டம் இருக்கும்.இவர்கள் மதுபாட்டில்கள் வாங்கிக் கொண்டு, பஜார் பகுதியில் உள்ள கடைகளின் அருகே அமர்ந்து மது அருந்துகின்றனர்.'டாஸ்மாக்' கடை அருகே இந்தியன் வங்கி மற்றும் அதன் ஏ.டி.எம்., ஆகியவை உள்ளன. வங்கிக்கு வருவோர், மதுப்பிரியர்களின் தொல்லையால் பெரும் சிரமத்திற்கும், அச்சத்திற்கும் ஆளாகின்றனர். இதே பகுதியில் அமைந்துள்ள சர்ச்சுகளுக்கு வருவோரும், விடுமுறை நாட்களில் வரும் சுற்றுலா பயணியருக்கும், டாஸ்மாக் கடை இடையூறாக அமைந்துள்ளது.மாலை துவங்கி, நள்ளிரவு வரை பழவேற்காடு பஜார் பகுதியில் 'குடி'மகன்கள் கூட்டம் கூட்டமாக நின்று, அவ்வழியாக செல்வோருக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். இதனால் பெண்கள், பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.எனவே, மக்களுக்கு இடையூறு இல்லாத வேறு பகுதிக்கு டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.