உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகள் விவசாயிகள் பிடித்து வைத்ததால் பரபரப்பு

பயிர்களை சேதப்படுத்தும் கால்நடைகள் விவசாயிகள் பிடித்து வைத்ததால் பரபரப்பு

சோழவரம்: புதிய எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், இரவு நேரங்களில் கூட்டமாக வரும் கால்நடைகள், பயிர்களை மிதித்து சேதப்படுத்துவதால் விவசாயிகள் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். சோழவரம் ஒன்றியம், புதிய எருமைவெட்டிபாளையம் கிராமத்தில், 200 ஏக்கர் பரப்பில் கத்திரி, வெண்டை, பாகற்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் மற்றும் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக அருகில் உள்ள கிராமங்களில் இருந்து, நுாற்றுக்கணக்கான மாடுகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வந்து, விளைநிலங்களில் புகுந்து, காய்கறி மற்றும் நெல் பயிர்களை சேதப்படுத்துகின்றன. இது குறித்து விவசாயிகள், வேளாண்மை, வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. நேற்று முன்தினம் இரவு, கூட்டமாக வந்த கால்நடைகளை விவசாயிகள் சுற்றி வளைத்து பிடித்து, கிராமத்தில் கட்டி வைத்தனர். தகவல் அறிந்த வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர். அவர்களிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 'மாடு வளர்ப்பவர்கள், அவற்றை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தரவேண்டும்' என வலியுறுத்தினர். அதையடுத்து, அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மாடுகள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதை தொடர்ந்து, கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகள் விடுவிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை