மீன்பிடி தடைகாலம் எதிரொலி பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு செல்வதை தவிர்க்கும் மீனவர்கள்
பழவேற்காடு மீன்களின் இனப்பெருக்க காலம் காரணமாக, 61நாட்களுக்கான மீன்பிடி தடைகாலம், கடந்த, 15ம் தேதி நள்ளிரவு முதல் துவங்கியது. ஜூன், 14ம் தேதி வரை தொடரும்.தடை காலத்தில் பெரிய இயந்திர படகுகள், விசைப்படகுகள் மீன்பிடிக்க அனுமதியில்லை. பைபர் மற்றும் நாட்டுபடகுகள், கட்டுமரம் உள்ளிட்டவைகளில் மீன்பிடிக்க தடை ஏதும் இல்லை.பழவேற்காடு பகுதியில் பைபர் , நாட்டுப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் மீன்படி தொழில் செய்கின்றனர்.தடை இல்லை என்றாலும், மீன்களின் இனப்பெருக்கத்திற்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் ஆழ்கடலுக்கு செல்வதை பழவேற்காடு மீனவர்கள் தவிர்த்து வருகின்றனர். இவர்கள் கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளிலேயே கடந்த ஒரு வாரமாக மீன்பிடி தொழில் செய்கின்றனர்.இது குறித்து மீனவர்கள் கூறியதாவது:.வழக்கமாக, 10நாட்டிக்கல் மைல் தொலைவு துாரம் சென்று மீன்பிடித்து வருவோம். மீன்பிடி தடைகாலத்தில் நாங்கள் பைபர் படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை இல்லை. இருப்பினும், மீன் இனப்பெருக்க காலத்தில் பெரும்பாலான மீனவர்கள் தொழிலுக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர்.தடைகால நிவாரணமாக, தமிழக அரசு, ஒவ்வொரு மீனவர் சங்க உறுப்பினருக்கும், 8,000 ரூபாய் வழங்குகிறது. இரண்டு மாதத்திற்கு அதுபோதுமானதாக இருக்காது என்பதால், ஒரு சிலர் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்வர். இரண்டு மாதங்களுக்கு வருவாய் இருக்காது. மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் வேறுவழியில்லை. அரசு கூடுதல்ல நிவாரணம் வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.