தொழிற்சாலையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள இரும்பு திருடிய ஐந்து ஊழியர்கள் சிக்கினர்
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய இரும்புகளை திருடி, விற்பனை செய்த ஊழியர்கள் ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே பாஞ்சாலை கிராமத்தில், 'சதன் அலாய்ஸ் பவுண்டரிஸ்' என்ற பெயரில் வாகன உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலை உரிமையாளர் சார்பில், பாதிரிவேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் குறிப் பிடப்பட்டு உள்ளதாவது: தொழிற்சாலை வளாகத்தில் இருந்த, 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய இரும்புகள் திருடு போனது. தொழிற்சாலை ஊழியர்களான, சென்னை பெரியமாத்துாரைச் சேர்ந்த நரேஷ், 29, மாதவரம் ரெஜி ஞானபிரகாசம், 40, சூரப்பட்டு ஜஸ்டின் துரை, 35, காரனோடை அழகேசன், 30, புதுப்பாளையம் ஜவஹர், 33, ஆகியோர் திருடியது தெரியவந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார், ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.