கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் வெள்ள தடுப்புச்சுவர் அமைப்பு விவசாயிகள் நிம்மதி
திருத்தணி:கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் விவசாய நிலங்களில் அரிப்பை தடுக்க, 94 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் உருவாகும் கொசஸ்தலை ஆறு, திருத்தணி தாலுகா நல்லாட்டூர், என்.என்.கண்டிகை, லட்சுமாபுரம், ராமாபுரம் வழியாக நாராயணபுரம் கூட்டுச்சாலை அருகே பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது. கனமழை மற்றும் பருவமழை காலங்களில், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். குறிப்பாக, ஆந்திர மாநிலம் அம்மப்பள்ளி அணைக்கட்டில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீர், கொசஸ்தலை ஆறு வழியாக பூண்டிக்கு செல்கிறது. இந்நிலையில், நெமிலி - என்.என்.கண்டிகை இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் அருகே ஆற்றின் கரையோரம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கரை அரிப்பால் வெள்ளம் விவசாய நிலத்தில் செல்லும். இதனால், விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். ஆற்றின் கரையோரம் வெள்ள தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். இதன் பயனாக, மேம்பாலம் அருகே உள்ள ஆற்றின் கரையோரம், 94 லட்சம் ரூபாய் மதிப்பில், 128 மீ., நீளத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க, திருத்தணி பொதுப்பணித்துறையினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், 'டெண்டர்' விட்டு பணிகளை மேற்கொண்டனர். தற்போது, வெள்ள தடுப்புச்சுவர் பணிகள் முடிந்துள்ளன. இதனால், விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், வெள்ள தடுப்புச்சுவர், 300 மீட்டர் கூடுதலாக கட்ட வேண்டும் என, கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.