வனச்சரகர் அலுவலக கட்டடம் ஊழியர்கள் பணிபுரிய அச்சம்
திருத்தணி: திருத்தணி வனச்சரகர் அலுவலகம் சேதமடைந்துள்ளதால், ஊழியர்கள் பணிபுரிய அச்சப்படுகின்றனர். திருத்தணி கே.கே.நகர் பகுதியில் திருத்தணி வனச்சரகர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, வனச்சரகர், வனவர் மற்றும் இரவு காவலர்கள் என, 10க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2011 - 12ம் ஆண்டு, 50 லட்சம் ரூபாய் மதிப்பில், வனச்சரகர் அலுவலக கட்டடம் கட்டப்பட்டது. இந்நிலையில், அலுவலக கட்டடத்தை முறையாக பராமரிக்காததால், தற்போது கட்டடம் சேதமடைந்து வருகிறது. கட்டடத்தின் உட்பகுதியில் தரைத்தளம் சேதமடைந்துள்ளது. மேலும், அலுவலகம் முன்பகுதி குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதுதவிர, அலுவலக கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதால், விஷ ஜந்துக்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து விடுகிறது. இதனால், அலுவலகத்திற்கு வரவே ஊழியர்கள் அச்சப்படுகின்றனர். எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விரைந்து நடவடிக்கை எடுத்து, வனச்சரக அலுவலகத்தை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.