நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்து
கும்மிடிப்பூண்டி:சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள உணவகங்கள் முன் நிறுத்தப்படும் வாகனங்களால், அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான சாலையோரம், ஏராளமான உணவகங்கள் உள்ளன. இங்கு வரும் வாகனங்கள், இணைப்பு சாலையோரம் நிறுத்தப்படுகின்றன. ஆனால், பெருவாயல், வேர்க்காடு, கும்மிடிப்பூண்டி பைபாஸ் பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு வரும் பெரும்பாலான கனரக வாகன ஓட்டிகள், இணைப்பு சாலையை தவிர்க்கின்றனர். மாறாக, தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தான வகையில், வாகனங்களை நிறுத்தி விட்டு சாப்பிட செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், பின்னால் வேகமாக வரும் மற்ற வாகனங்கள், சாலையோரம் நிற்கும் கனரக வாகனங்களால் திக்குமுக்காடி போகின்றன. சில சமயம், அந்த வாகனங்கள் மீது மோதி விபத்தில் சிக்குகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ரோந்து படையினர் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், இப்பகுதிகளில் காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு,இணைப்பு சாலையில் வாகனங்களை நிறுத்த வலியுறுத்த வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.