உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்

அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்

திருத்தணி கிருஷ்ணசமுத்திரம் பகுதியில், மின்வாரிய துறை அதிகாரிகளின் அலட்சியத்தால், அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதால், பகுதிமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் சிரமப்படுகின்றனர். திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பியுள்ளனர். ஒரு மாதமாக இக்கிராமத்தில் சீரான மின்சாரம் வழங்காமல், மின்வாரிய துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டால், உடனே வழங்காமல் நான்கு - ஐந்து மணி நேரம் கழித்து தான் மின்வினியோகம் செய்யப்படுகிறது. சில நாட்களில், இரவு முழுதும் மின்சாரம் வருவதில்லை. இதனால், மக்கள் வீடுகளில் நிம்மதியாக துாங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும், மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் முன்னறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்சாரத்தை துண்டிப்பதால், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. சிறு மழை பெய்தாலே, இரவு முழுதும் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், கிருஷ்ணசமுத்திரம் பகுதி மக்கள், திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட திட்டமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ