அரசு மருத்துவமனை பாதுகாப்பு கேள்விக்குறி
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம் வெளிகரத்தில், 10 ஆண்டுகளுக்கு முன் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் துவக்கப்பட்டது. இந்த சுகாதார நிலையத்தில் வெளிகரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்தவர்களும், ஆந்திர மாநிலம், நெல்வாய் கிராம மக்களும் வந்து செல்கின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் இல்லை. இதனால், பகல் நேரத்தில் கால்நடைகள் சுகாதார நிலைய வளாகத்திற்குள் வந்து செல்லும் நிலை உள்ளது. இதனால், மருத்துவமனை வரும் கர்ப்பிணியர் மற்றும் முதியவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பாதுகாப்பு கருதி மருத்துவமனை வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுகாதார ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.