பொன்னேரி ரயில்வே சுரங்கப்பாதையில் கனரக வாகனம் சிக்கியதால் பரபரப்பு
பொன்னேரி:பொன்னேரி ரயில்வே சுரங்கப்பாதையில், கான்கிரீட் கலவை ஏற்றிச் சென்ற லாரி சிக்கியதால், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில், திருவாயற்பாடி பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ளது. இந்த வழியாக, மெதுார், கோளூர், பெரும்பேடு உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள், பொன்னேரிக்கு வந்து செல்கின்றனர். காலை - மாலை நேரங்களில், சுரங்கப்பாதையில் கடும் போக்குரவத்து நெரிசல் ஏற்படும். நேற்று காலை, மெதுார் பகுதியில் இருந்து கான்கிரீட் கலவை ஏற்றிக்கொண்டு, லாரி ஒன்று பொன்னேரிக்குள் வந்து கொண்டிருந்தது. இந்த சுரங்கப் பாதையை கடக்கும்போது, லாரியின் மேல்பகுதி சிக்கிக் கொண்டது. இதனால், லாரி மேற்கொண்டு நகர முடியாத நிலை ஏற்பட்டது. இருபுறமும் வாகனங்களும் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகின. சுரங்கப்பாதையின் உயரத்தைவிட, லாரியின் உயரம் அதிகமாக இருந்தது. இதையடுத்து, லாரியின் சக்கரங்களில் இருந்து, காற்றை குறைத்து அதன் உயரத்தை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீண்டநேர போராட்டத்திற்கு பின், லாரி பின்நோக்கி நகர்த்தி கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால், அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கும் ஆளாகினர். வழக்கமாக, சுரங்கப்பாதைகள் இருக்கும் இடங்களில், வாகனங்களை எச்சரிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்படும். இங்கு, அதுபோன்று எந்த நடவடிக்கையும் ரயில்வே மேற்கொள்ளாத நிலையில், கல், மண், ஜல்லி ஏற்றிக்கொண்டு செல்லும் கனரக வாகனங்கள், சுரங்கப்பாதையின் மேல்பகுதியில் உரசியபடி பயணிக்கின்றன. இதனால், சுரங்கப்பாதையின் கட்டுமானங்கள் சேதமடைகின்றன. எனவே, ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.