கால்நடை எண்ணிக்கை எவ்வளவு? விபரம் வெளியிட எதிர்பார்ப்பு
திருவாலங்காடு:தமிழகத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணைந்து, 21வது கால்நடை கணக்கெடுப்பு பணியை கடந்தாண்டு அக்., மாதம் துவக்கி, நடப்பாண்டு ஏப்., வரை நடத்தியது. இதற்கென பயிற்சி பெற்ற கால்நடை கணக்கெடுப்பாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட அனைத்து கால்நடைகள் துவங்கி, விவசாய உபகரணங்களும் கணக்கெடுக்கப்பட்டன.அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, கடம்பத்தூர், புழல், பூண்டி, சோழவரம் உட்பட 14 ஒன்றியங்களில் உள்ள கால்நடைகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டன. மாவட்டத்தில் தெரு நாய் கடிக்கு ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் பலியாகியுள்ள நிலையில், அதுதொடர்பான கணக்கெடுப்பும், கால்நடை பராமரிப்புத் துறையினர் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.விவசாய அமைப்பினர் பலர், அரசு எடுத்த கணக்கெடுப்பை காட்டிலும் இரட்டிப்பு எண்ணிக்கையில் கால்நடைகள் பலியாகியுள்ளன எனக் கூறி வருகின்றனர்.இந்நிலையில், கால்நடைகள் கணக்கெடுப்பின்படி மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட விபரங்கள், கால்நடை வளர்ப்போரின் விபரங்கள், வளர்க்கப்படும் கால்நடைகள் குறித்த விபரங்களை வெளியிட வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை அதிகாரி கூறுகையில், 'கால்நடை கணக்கெடுப்பு பணி தேசிய அளவில் நடத்தப்பட்டு உள்ளது. எனவே, அவர்களின் அறிவுறுத்தலின்படி எண்ணிக்கை வெளியிடப்படும். இறந்த கால்நடைகள் குறித்து தெளிவான அறிக்கை, ஏப்., 30 வரை அளிக்கப்பட்டுள்ளது' என்றார்.