உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வசூலிக்க வேண்டிய வரித்தொகை எவ்வளவு? மாஜி ஊராட்சி தலைவர் தெரிவிக்க உத்தரவு

வசூலிக்க வேண்டிய வரித்தொகை எவ்வளவு? மாஜி ஊராட்சி தலைவர் தெரிவிக்க உத்தரவு

சென்னை:வசூலிக்க வேண்டிய வரி தொகை விபரங்களை, திருவள்ளூர் மாவட்ட தொடுகாடு பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், தொடுகாடு பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன், அம்மாவட்ட கலெக்டருக்கு எதிராக தாக்கல் செய்த அவமதிப்பு மனு:எங்கள் பஞ்சாயத்திலும், அதை சுற்றிய பகுதியிலும், 26 பெரிய நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த நிறுவனங்களுக்கான திருத்திய சொத்து வரியை வசூலிக்க நடவடிக்கை எடுத்தோம். அதுகுறித்து, நிறுவனங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியும் பதில் இல்லை. சொத்து வரி வசூலிக்க, வருவாய் வசூல் அதிகாரியை நியமிக்கும்படி, கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பின், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.சொத்து வரி வசூலிக்க உடன் நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஜூன், 23ல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை, கலெக்டர் அமல்படுத்தவில்லை. எனவே, நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ், கலெக்டருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. உத்தரவை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதி தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில், பஞ்சாயத்து தலைவர் பதவியில் இருந்து வெங்கடேசன் நீக்கப்பட்டார். அவமதிப்பு வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் குமரேசன் ஆஜராகி, நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட சொத்து வரி, தொழில் வரி, வணிக உரிம கட்டண விபரங்களை தாக்கல் செய்தார். மேலும், 5.95 கோடி ரூபாய் வர வேண்டியதுள்ளது; அதில், 1.57 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது; மீதி தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், மனுதாரர் தரப்பில் தெரிவித்த தொகை கூடுதலானது எனவும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.எஸ்.சுரேஷ், ''வசூலிக்கப்பட வேண்டிய மொத்த தொகை விபரங்களை, மனுதாரர் அளிப்பார். அந்த தொகை, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட தொகைக்கும் அதிகமானது. இதுகுறித்து, மனு தாக்கல் செய்யப்படும்,'' என்றார்.இதையடுத்து, மனுதாரர் தரப்பில் முழு விபரங்களையும் அளித்து, மனுத் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்ட நீதிபதி, அதன் அடிப்படையில் மேல் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார். அவமதிப்பு வழக்கின் விசாரணையை, வரும் 25ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.****


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை