மேலும் செய்திகள்
சேதமடைந்த மின் கம்பத்தால் மக்கள் அச்சம்
27-Oct-2025
பொன்னேரி: கண்ணியம்பாளையத்தில் மின்மாற்றியில் உள்ள கம்பங்கள் சேதமடைந்து இருப்பதால், அப்பகுதி மக்கள் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர். பொன்னேரி அடுத்த கண்ணியம்பாளையம் கிராமத்தில், காரனோடை - சீமாவரம் சாலையையொட்டி அமைந்துள்ள மின்மாற்றி பராமரிப்பின்றி உள்ளது. மின்மாற்றியில் உள்ள கம்பங்களின் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து சேதமடைந்துள்ளன. பலவீனமடைந்த மின்கம்பங்கள், எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளன. மேலும், மின்மாற்றியை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து, பராமரிப்பின்றி உள்ளது. பராமரிப்பு இல்லாத மின்மாற்றியால், மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து, கிராமத்தில் உள்ள, 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், விவசாய மோட்டார்கள் ஆகியவற்றிற்கு மின் வினியோகம் நடைபெறுகிறது. மின்மாற்றியின் கம்பங்கள் உடைந்து விழும்போது, அசம்பாவிதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதால், கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே, சோத்துப்பெரும்பேடு துணைமின் நிலைய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்மாற்றியின் கம்பங்களை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க வேண்டும். மேலும், செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27-Oct-2025