உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மின்சாரமின்றி சமையல் கூடம் மாணவர்கள் சுகாதாரம் கேள்விக்குறி

மின்சாரமின்றி சமையல் கூடம் மாணவர்கள் சுகாதாரம் கேள்விக்குறி

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம், வன்னிப்பாக்கம் கிராமத்தில் உள்ள, அரசு துவக்கப் பள்ளியில், 40 மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு மதிய உணவு திட்டத்திற்கு, உணவு தயாரிப்பதற்கான சமையல் கூடம் பழுதானதை தொடர்ந்து, 2022 - 23 நிதியாண்டில், மஹாத்மா காந்தி தேசிய வேலைத் திட்டத்தின்கீழ், 7.43 லட்சம் ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.கட்டடம் பயன்பாட்டிற்கு வந்து, இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை கட்டடத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. மின்விளக்கு வசதியில்லாமல், சத்துணவு ஊழியர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த கட்டடத்தை சுற்றிலும் பள்ளி வகுப்பறை கட்டடம், ஊராட்சி அலுவலகம் அமைந்திருப்பதால், போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டில் சமையல் செய்கின்றனர்.அவ்வாறு சமைக்கும்போது, அதில் ஏதேனும் பூச்சி, பல்லி விழுந்தாலும் தெரியாது எனவும், இதனால் மாணவர்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.மாணவர்கள் நலன் கருதி, உடனடியாக மேற்கண்ட சமையல் கூடத்திற்கு மின் இணைப்பு வழங்க, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !