மேலும் செய்திகள்
இலவச மனைப்பட்டா வழங்கல்
18-Oct-2025
திருத்தணி : ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா குறித்து கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இலவச வீட்டுமனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேலாகியும், வீடுகள் கட்டாதவர்கள் குறித்து கணக்கெடுத்து, விரைவில் வீடுகள் கட்ட வேண்டும் என அறிவுறுத்தப்படுவர். தவறும்பட்சத்தில், வீட்டுமனைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று ரத்து செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, திருவள்ளூர், பொன்னேரி ஆகிய மூன்று வருவாய் கோட்டங்கள் உள்ளன. இங்குள்ள 14 ஒன்றியங்களில், 526 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், ஆதிதிராவிடர் நலத்துறை பிரிவு இயங்கி வருகிறது. இங்கு, தாசில்தார், சர்வேயர், இளநிலை உதவியாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர் என, ஐந்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த அலுவலகத்தின் மூலம், வீடுகள் இல்லாத ஆதிதிராவிடர்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்குவதற்கு நிலம் கையகப்படுத்தி, தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 30 ஆண்டுகளில் மாவட்டம் முழுதும், 15,000க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. வீட்டுமனை பட்டா பெற்ற பயனாளிகளில் பெரும்பாலானோர் வீடு கட்டாமல் உள்ளனர். இதனால், வீட்டுமனை பட்டா வழங்கிய நிலம் வீணாகி வருகிறது. இதையடுத்து, தமிழக அரசின் உத்தரவின்படி, மாவட்ட கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர்களிடம் ஆலோசனை கூட்டம் நடத்தி, ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்கள் குறித்து கணக்கெடுத்து தரும்படி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார், தாலுகா தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கிராம நிர்வாக அலுவலர்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சிகளில் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைகள் விபரம், நிலப்பரப்பு உள்ளிட்ட விபரங்களை, டிசம்பர் மாத முதல் வாரத்தில் களஆய்வு செய்து, புள்ளிப்பட்டியல் தயாரித்து வழங்க வேண்டும் என, கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது, கிராம நிர்வாக அலுவலர்கள், ஆதிதிராவிட நலத்துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனைகள் குறித்து கணக்கெடுக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 1980ம் ஆண்டு முதல் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச வீட்டுமனை பட்டாவில் எத்தனை பேர் வீடுகள் கட்டியுள்ளனர், காலியாக உள்ள மனைகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதில், வீடுகள் கட்டி வசிப்பவர்களுக்கு இணைய பட்டா வழங்கப்படும். காலியாக உள்ள மனைகள் குறித்த பட்டியல் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி, அந்த பட்டாக்கள் ரத்து செய்யப்படும். மேலும், புதிய பயனாளிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு இலவச பட்டா வழங்கப்படும். இதற்கான பணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். சிலர், வீட்டுமனை மற்றும் பட்டா பெற்றும், வீடுகள் கட்டாமல் வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இதனால், தகுதிவாய்ந்த பயனாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வீட்டுமனை பெற்று, 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் வீடுகள் கட்டாதவர்கள் குறித்து கணக்கெடுத்து, மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்படும். பின், அரசு கவனத்திற்கு கொண்டு சென்று, புதிய பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். வீட்டுமனை பட்டா பயனாளிகள் ஆவேசம் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டா நிலத்தை, வருவாய் துறையினர் அளந்து கொடுப்பதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். மேலும், வீட்டுமனை பட்டா வழங்கிய இடங்களில் முட்செடிகள் வளர்ந்துள்ளதால், பயனாளிகள் வீடுகள் கட்டுவதில் தாமதம் ஏற்படுகிறது. உதாரணமாக. ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில், 60க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்கள், எட்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை வருவாய் துறையினர் அளந்து கொடுக்கவில்லை. இதனால், அங்கு வீடுகள் கட்டுவதில் காலதாமதம் ஏற்படுகிறது என, வருவாய் துறை அதிகாரிகள் மீது பயனாளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
18-Oct-2025