அடித்து சென்ற சாலை தற்காலிக படகு சவாரி
பொன்னேரி:பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர், ஆரணி ஆறு வழியாக, பழவேற்காடு பகுதியில் கடலில் கலக்கிறது. நேற்று முன்தினம் முதல், ஆரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இடையில், பொன்னேரி அடுத்த, ஆண்டார்மடம் கிராமத்தில், ஆற்றின் குறுக்கே, பழவேற்காடு நோக்கி செல்லும் மண் சாலை, ஆற்று வெள்ளத்தில் அடித்து சென்றது.அப்பகுதியில் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டு கிராமத்தினர், கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். வாகன ஓட்டிகள், 10 கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அவசர மற்றும் அத்தியாவசிய தேவைக்காக செல்பவர்களின் நலன் கருதி, சாலை துண்டித்த பகுதியில், ஆரணி ஆற்றில், அரசு சார்பில் தற்காலிக படகு சவாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.