சூடான தோசை கல்லால் ஓட்டுநரை தாக்கியவர் கைது
குன்றத்துார்: அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அன்புமணி, 25, பிரகாஷ், 34. இருவரும், குன்றத்துார் அருகே திருமுடிவாக்கத்தில் உள்ள தனியார் கனரக டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் இரவு 10:00 மணி அளவில், இருவரும் மது அருந்தி சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த அன்புமணி, அடுப்பில் இருந்த சூடான தோசை கல்லை எடுத்து பிரகாஷ் தலையில் தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த பிரகாஷை, அங்கிருந்தோர் மீட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரித்த திருமுடிவாக்கம் போலீசார், அன்புமணியை கைது செய்து விசாரிக்கின்றனர்.