ரூ. 27 கோடி மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
ஆவடி,:தனியார் நிறுவனத்தில் விதிமீறி தீர்மானம் நிறைவேற்றி, பங்குதாரர் பங்கு மதிப்பை குறைத்து, 27 கோடி ரூபாய் மோசடி செய்த நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்தவர் அகமது கபீர், 48. இவர், பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் 'செய்கோடேன்கி இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தின், நிறுவன இயக்குனராகவும், பங்குதாரராகவும் உள்ளார். கடந்த 2017ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், வீட்டுக்கு தேவையான மின்சார ஒயர்கள் மற்றும் அது தொடர்புடைய கருவிகளை உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் பங்குதாரரான காதர் மைதீன் என்பவர், அவரது சகோதரர் மன்சூர் அலியை பொது மேலாளராக நியமித்துள்ளார். பின், காதர் மைதீன், தன் பங்கு மதிப்பை உயர்த்துவதற்கு, நிறுவனத்தின் விதியை மீறி, மன்சூர் அலியை இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளார். இதையடுத்து உடனடியாக காதர் மைதீன் பங்கு மதிப்பு, 35 சதவீதத்தில் இருந்து, 51 சதவீதமாக உயர்த்தி, காதர் மைதீன் கையெழுத்து போட்டு, நிறுவனத்தின் விதியை மீறி தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதனால், அகமது கபீர் பங்கு மதிப்பு, 24.5 சதவீதமாக குறைந்து, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, காதர் மைதீன், மேற்படி நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து, 2.25 கோடி ரூபாய் கையாடல் செய்து, அதில், 1.25 கோடி ரூபாயை அவரது சகோதரர் மன்சூர் அலிக்கு அனுப்பியுள்ளார். கையாடல் செய்த பணத்தில், காதர் மைதீன் மற்றும் அவரது சகோதரர் மன்சூர் அலியும் சேர்ந்து 'அஜித் இந்தியா எண்டர்பிரைசஸ்' என்ற பெயரில், புது நிறுவனத்தை விலைக்கு வாங்கி உள்ளனர். இச்செயல்களால், அகமது கபீருக்கு 27 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் அகமது கபீர் கடந்த 2024 ஏப்ரலில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார், மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த சாலிகிராமம், கண்ணபிரான் காலனியைச் சேர்ந்த மன்சூர் அலி, 50 என்பவரை கைது செய்து நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.