வாலிபரை தாக்கி பணம், பைக் பறித்தவருக்கு மாவுக்கட்டு
மணவாளநகர்:கடம்பத்துார் ஒன்றியம் வெள்ளேரிதாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ், 20; தனியார் ஊழியர். இவர், நேற்று முன்தினம் மாலை போளிவாக்கம் வழியாக, 'யமஹா' இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, போளிவாக்கம் அடுத்த பாக்குபேட்டை பகுதியில் வழிமறித்த போதை நபர், ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். மேலும், 4,000 ரூபாய் மற்றும் இருசக்கர வாகனத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்த புகாரின்படி, மணவாளநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில், பாக்குபேட்டையைச் சேர்ந்த சதீஷ்குமார், 29, என தெரிய வந்தது. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அப்பகுதியில் உள்ள மாந்தோப்பில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. மணவாளநகர் போலீசார் சதீஷ்குமாரை பிடிக்க சென்றனர். அப்போது, பதுங்கியிருந்த சதீஷ்குமார் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றார். இதில், கீழே விழுந்ததில் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, சதீஷ்குமாரை கைது செய்த போலீசார், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இருசக்கர வாகனம் மற்றும் 4,000 ரூபாயை போலீசார் மீட்டனர்.