உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாநெல்லுார் சிப்காட் நான்கு வழிச்சாலை பணி வேகம் மூன்று மாதத்திற்குள் முடிக்க முடிவு

மாநெல்லுார் சிப்காட் நான்கு வழிச்சாலை பணி வேகம் மூன்று மாதத்திற்குள் முடிக்க முடிவு

கும்மிடிப்பூண்டி:மாநெல்லுார் சிப்காட் தொழிற்பூங்காவிற்கான புதிய நான்கு வழிச்சாலை திட்ட பணிகள், நில எடுப்பு பணிகளில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, இரண்டரை ஆண்டுகளாக மந்தகதியில் இருந்தது. நில எடுப்பு பணிகள் முழுமை பெற்றதால், சாலை பணிகள் வேகமெடுத்துள்ளது. மூன்று மாதத்திற்குள் பணிகள் நிறைவுபெறும் என, நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர்.திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில், கும்மிடிப்பூண்டி மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய இரு சிப்காட் வளாகங்கள் உள்ளன. கும்மிடிப்பூண்டியை தொடர்ந்து, 1,127 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்ட தேர்வாய்கண்டிகை சிப்காட் வளாகம் முழுதும் தொழிற்சாலைகளுக்கு ஒதுக்கப்பட்டது.தேர்வாய்கண்டிகை சிப்காட்டில் தற்போது இடம் இல்லாததால், அரசு புறம்போக்கு நிலங்கள் அதிகளவில் உள்ள மாதர்பாக்கம் பகுதியில், புதிதாக மாநெல்லுார் சிப்காட் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, 1,800 ஏக்கர் பரப்பளவில், மாநெல்லுார் சிப்காட் வளாகம் வரவுள்ளது.தேர்வாய்கண்டிகை மற்றும் மாநெல்லுார் ஆகிய இரு சிப்காட் வளாகங்களையும் இணைக்கும் நோக்கில், புதிய நான்கு வழிச்சாலை ஏற்படுத்த சிப்காட் நிர்வாகம் முடிவு செய்தது. குறிப்பாக, சென்னையில் இருந்து கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலை வழியாக எளிதில் மாநெல்லுார் சிப்காட் வளாகத்தை அடையும் வகையில், நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என, சிப்காட் நிர்வாகம் தெரிவித்திருந்தது.அதன்படி, கவரைப்பேட்டை -- சத்தியவேடு சாலையில், 14வது கி.மீ.,யில் உள்ள தாணிப்பூண்டி சந்திப்பில் இருந்து வாணியமல்லி கிராமம் வழியாக, கும்மிடிப்பூண்டி -- மாதர்பாக்கம் சாலையில், 12வது கி.மீ.,யில் உள்ள அல்லிப்பூகுளம் சந்திப்பு வரை, 4.1 கி.மீ., நீளத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது.இதற்காக, சிப்காட் நிர்வாகம் சார்பில், 54.41 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மீடியனுடன், 15 மீட்டர் அகல சாலை அமைக்க, பெரும்பகுதி இடம், அரசு நிலங்களில் இருந்து ஒதுக்கப்பட்டன. அவற்றுடன், வாணியமல்லி கிராமத்தில், 3.3 ஏக்கர் விவசாய நிலங்களும், மாதர்பாக்கம் கிராமத்தில், 6.93 ஏக்கர் பட்டா நிலங்களும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டது. கடந்த 2022 ஜூன் மாதம், மாநில நெடுஞ்சாலை துறையினர் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகளை துவங்கினர்.பதினோறு மாதங்களில் சாலை பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், பட்டா நிலம் கையகப்படுத்தும் பணிகளில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, இரண்டரை ஆண்டுகளாக ஒன்றரை கி.மீ., சாலை மட்டுமே அமைக்கப்பட்டது.இந்நிலையில், பட்டா நிலங்கள் கையகப்படுத்தும் பணிகள் முழுமை பெற்று, சாலை பணிக்காக நிலங்கள் ஒப்படைக்கப்பட்டன. தற்போது, சாலை பணிகள் வேகம் எடுத்து, முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அலுவலர் கூறுகையில், 'மாநெல்லுார் சிப்காட் புதிய நான்கு வழிச்சாலைக்கான நிலங்கள் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. மூன்று மாதத்திற்குள் பணிகள் நிறைவு பெறும்' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ