தீர்வு காணப்படாத சாலை வாகன ஓட்டிகள் அவதி
பொதட்டூர்பேட்டை: புறவழிச்சாலையில் தனிநபருக்கு சொந்தமான இடம் என, தடை ஏற்படுத்தப்பட்டுள்ள பகுதியில், மழைநீரும் தேங்கியுள்ளதால், வாகனஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பொதட்டூர்பேட்டை நகருக்கு அருகே, வாணிவிலாசபுரம் கூட்டுச்சாலையில் இருந்து, அத்திமாஞ்சேரிபேட்டை சாலை வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பிட்ட ஒரு பகுதி, தனிநபர் ஒருவருக்கு சொந்தம் எனக்கூறி, சாலையின் குறுக்கே சம்பந்தப்பட்ட நபர் தடை ஏற்படுத்தி உள்ளார். இதற்கு, பேரூராட்சி நிர்வாகம் இதுவரை தீர்வு காணவில்லை. இதனால், அதையொட்டிய மாற்றுப்பாதையில் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மாற்றுப்பாதையிலும், தற்போது மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். புறவழிச்சாலையை பயன்படுத்த முடியாததால், பொதட்டூர்பேட்டை நகர் வழியாக நெரிசலில் வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, பேரூராட்சி நிர்வாகம் விரைந்து தீர்வு காண வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.