உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி அருகே சுடுகாட்டுக்கு இடம் கேட்டு 17 ஆண்டுகளாக போராடும் முஸ்லிம்கள்

கும்மிடி அருகே சுடுகாட்டுக்கு இடம் கேட்டு 17 ஆண்டுகளாக போராடும் முஸ்லிம்கள்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டக்கரை நேதாஜி நகரில், 300க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான இறுதிச்சடங்கு செய்யும் இடம், கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் உள்ள மசூதியின் பின்புறம் உள்ளது.அந்த இடம் கும்மிடிப்பூண்டியில் வசிக்கும் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கான பொதுவான இடம் என்பதால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.மேலும், 2 கி.மீ., தொலைவில் இருக்கும் காரணத்தால், நேதாஜி நகரில் வசிக்கும் முஸ்லிம்களுக்காக, தனி இடம் ஒதுக்க வேண்டும் என, 2008ம் ஆண்டு முதல் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.முஸ்லிம்கள், ஹிந்துக்கள், கிறிஸ்துவ மக்களுக்கு பொதுவாக, தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில், சமத்துவ சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கப்படும் என, கடந்த 2014ம் ஆண்டு, தேர்வழி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி, அந்த ஆண்டே தேர்வழி கிராமம், சர்வே எண்: 502/2 மற்றும் 503ல் உள்ள 90 சென்ட் இடம், மூன்று மதத்தினருக்காக ஒதுக்கப்பட்டது.அதை எதிர்த்து, தேர்வழி கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆட்சேபனை தெரிவித்து, அரசுக்கு மனு அளித்தனர். அதன்படி, அரசு தரப்பில் நடந்த சமாதான கூட்டத்தில், எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.அதன்பின், கிணற்றில் போட்ட கல் போன்று, அந்த விவகாரத்தை அரசு கண்டுகொள்ளவில்லை. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும் வழி பிறக்கும் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அரசு அதிகாரிகள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், கைக்கு எட்டியது கிடைக்காமல் போன வேதனையில், நேதாஜி நகர் முஸ்லிம்கள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, 17 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு இடம் கேட்டு போராடி வரும் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வழிவகை செய்ய வேண்டும் என, எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை