நாராயணபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம் வாகனங்களால் ஆக்கிரமிப்பு
ஆர்.கே.பேட்டை:அரசு மருத்துவமனை நுழைவாயிலை ஒட்டி தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், மருத்துவமனைக்கு பேருந்தில் வந்து செல்லும் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.ஆர்.கே.பேட்டையில் இருந்து அம்மையார்குப்பம் செல்லும் சாலையில், நாராயணபுரம் கூட்டு சாலை ஒட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் இந்த மருத்துவமனைக்கு சுற்றுப்பகுதியை சேர்ந்த பகுதிவாசிகள் பல்வேறு சிகிச்சை மற்றும் பரிசோதனைகளுக்கு வந்து செல்கின்றனர். வெளியூரில் இருந்து வருபவர்கள், மருத்துவமனை நுழைவாயிலை ஒட்டி பேருந்துக்காக காத்திருந்து பயணிக்கின்றனர். மருத்துவமனைக்கு எதிரே பாலாபுரம் மார்க்கமாக பயணிப்பவர்களுக்கு நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. ஆனால், ஆர்.கே.பேட்டை மார்க்கமாக பயணிப்பவர்களுக்கு நிழற்குடை இல்லை. இதனால், சாலையோரம் காத்திருந்து பயணிக்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனை நுழைவாயிலை ஒட்டி தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், அந்த வழியாக வரும் பேருந்துகளை கவனிக்க முடியாததால், பேருந்துக்காக காத்திருப்பவர்கள், தார் சாலையை ஒட்டி காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மருத்துவமனை சுற்றுச்சுவரை ஒட்டி, அனைத்து அடிப்படை வசதிகளுடன் நிழற்குடை அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.