இலவச குடிநீருக்கு பணம் வசூல் நெமிலிச்சேரி மக்கள் அதிர்ச்சி
நெமிலிச்சேரி:நாகாத்தம்மன் நகரில், அதிகாரிகள் பெயரை குறிப்பிட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்த குடிநீருக் கு, குடத்திற்கு 5 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெமிலிச்சேரி ஊராட்சி, இரண்டாவது வார்டு, நாகாத்தம்மன் நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கடந்த 2019ல் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க, ஆழ்துளை கி ணறு அமைக்கப்பட்டது. அதிலிருந்து பெறப்பட்ட குடிநீர், 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 'பிளாஸ்டிக்' தொட்டியில் ஏற்றி, 2022 முதல், நாகாத்தம்மன் மக்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்பட்டு வந்தது. தினமும் 100க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் குடத்திற்கு 5 ரூபாய் வசூலிக்கப் பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, பகுதி மக்களுக்கு மீண்டும் இலவசமாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் இலவச குடிநீர் நிறுத்தப்பட்டு, பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், 'பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுறுத்தலின்படி குடத்திற்கு 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது' என, சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து ஊராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நாங்கள் யாரும் இலவச குடிநீருக்கு பணம் வசூலிக்க அறிவுறுத்தவில்லை. அங்கு ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பு பலகை அகற்றப்பட்டு, பொதுமக்களுக்கு மீண்டும் இலவசமாக குடிநீர் வினியோகிக்கப்படும்' என தெரிவித்தனர்.