விபத்தில் மூளைச்சாவு உடல் உறுப்புகள் தானம்
கும்மிடிப்பூண்டி:தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் மூளைச்சாவு அடைந்த பொறியாளரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. பெரியபாளையம் அடுத்த ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் மகன் தனுஷ்நாத், 26; மின் பொறியாளர். கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் சந்திப்பில், கட்டுமான பணியில் உள்ள ரயில் சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலையில், ஒப்பந்த அடிப்படையில் மின் தொடர்பான பணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த 7ம் தேதி பணியில் இருந்த போது, 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை மூளைச்சாவு அடைந்தார். குடும்பத்தினர் அளித்த ஒப்புதலின்படி, அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், கருவிழிகள் மற்றும் இதய வால்வுகள் தானமாக வழங்கப்பட்டன. இதுகுறித்து வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.