கும்மிடி - புதுச்சேரி விரைவு ரயில் தினமும் இயக்க பயணியர் கோரிக்கை
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி - புதுச்சேரி இடையே வாரத்தில் மூன்று நாட்கள் இயக்கப்படும் சர்க்கார் விரைவு ரயிலை, தினமும் இயக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திர மாநிலம், காக்கிநாடாவில் இருந்து நெல்லுார், கூடூர், கும்மிடிப்பூண்டி, எழும்பூர், தாம்பரம் மார்க்கமாக, செங்கல்பட்டு வரை தினமும் சர்க்கார் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. ஓராண்டுக்கு முன் இந்த ரயில், திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், செங்கல்பட்டில் இருந்து விழுப்புரம் வழியாக புதுச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது. இந்த மூன்று நாட்கள், மதியம் 1:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு, மாலை 6:40 மணிக்கு கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் வந்தடைகிறது. அதேபோல, அதிகாலை 4:20 மணிக்கு கும்மிடிப்பூண்டியில் இருந்து புறப்பட்டு, காலை 9:50 மணிக்கு புதுச்சேரி சென்றடைகிறது. கும்மிடிப்பூண்டி -- புதுச்சேரி இடையே சென்னை எழும்பூர், மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்துார், விழுப்புரம் ஆகிய ஆறு ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. தொழிற்சாலை நகரமான கும்மிடிப்பூண்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மேல்மருவத்துார், விழுப்புரம், புதுச்சேரி, கடலுார், சிதம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர். பயண நேரம் மற்றும் பண விரயத்தை குறைக்கும் சர்க்கார் விரைவு ரயிலுக்கு, கும்மிடிப்பூண்டி பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும், புதுச்சேரி வரை இயக்கப்படும் சர்க்கார் விரைவு ரயிலை, தினமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.