புதுவாயில் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையின்றி பயணியர் அவதி
கும்மிடிப்பூண்டி:புதுவாயில் சந்திப்பில் நிழற்குடைகள் இல்லாததால், பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அருகே புதுவாயில் சந்திப்பு உள்ளது. இங்கு, ஆந்திரா, சென்னை மற்றும் பெரியபாளையம் நோக்கி செல்லும் மூன்று சாலைகள் சந்திக்கின்றன. சிறுவாபுரி முருகன் கோவில், பெரியபாளையம் பவானி அம்மன் கோவில், பள்ளி, கல்லுாரிகள் செல்வோர், வியாபாரிகள், தொழிலாளர்கள் என, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர், மூன்று திசை சாலைகளிலும் காத்திருந்து, பேருந்து பயணம் செய்து வருகின்றனர். மூன்று திசைகளில் பேருந்துக்காக காத்திருக்கும் இச்சந்திப்பில், பயணியர் நிழற்குடை ஒன்று கூட அமைக்கவில்லை. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் மக்கள், சாலையோரம் ஆபத்தாக நிற்க வேண்டிய நிலையில் உள்ளனர். மேலும், மழையிலும், வெயிலிலும் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே, பயணியரின் நலன் கருதி, இந்த இடத்தில் மூன்று திசைகளிலும் நிழற்குடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.