இணைப்பு சாலையை தவிர்க்கும் பஸ்கள் விபத்து அச்சத்தில் பயணியர் காத்திருப்பு
கும்மிடிப்பூண்டி:இணைப்பு சாலையை தவிர்த்து, தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி, ஏற்றி செல்லும் பஸ்களால், பயணியர் விபத்து அச்சத்தில் உள்ளனர்.சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை அருகே புதுவாயல் சந்திப்பு பேருந்து நிறுத்தம் உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், சிறுவாபுரி மற்றும் பெரியபாளையம் கோவில் பக்தர்கள் என, தினமும் பல்லாயிரக்கணக்கான பேருந்து பயணியர் கூடும் முக்கிய சந்திப்பாக உள்ளது.இந்த சந்திப்பின் இருபுறமும் உள்ள இணைப்பு சாலைகளை தவிர்த்து, தேசிய நெடுஞ்சாலையில் பேருந்துகள் சென்று வருகின்றன. இதனால், சென்னை மற்றும் ஆந்திரா ஆகிய இரு மார்க்கமாக செல்லும் பயணியர் ஆபத்தாக, தேசிய நெடுஞ்சாலையோரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.பேருந்தில் இருந்து இறங்கும் பயணியரும், பேருந்து பிடிக்க அவசரமாக வரும் பயணியரும், ஆபத்தாக தேசிய நெடுஞ்சாலையை கடப்பதால், விபத்து அபாய பகுதியாக மாறி வருகிறது.எனவே, பயணியரின் நலன் கருதி, சென்னை மற்றும் ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அனைத்தும், இணைப்பு சாலைகள் வழியாக இயக்க வேண்டும். அதற்கு, கவரைப்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.