உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணி ஜவ்வு சாலையும் சகதியானதால் மக்கள் அவதி

மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணி ஜவ்வு சாலையும் சகதியானதால் மக்கள் அவதி

மீஞ்சூர்:மீஞ்சூர் ரயில்வே மேம்பாலத்திற்கான இணைப்பு சாலை பணி மந்தமாக நடந்து வருவதால், அங்குள்ள சாலை சகதியாக மாறியுள்து. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள மீஞ்சூர் -- நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, ரயில்வே கேட் அமைந்துள்ளது. மீஞ்சூர் - காட்டூர் மாநில நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், இந்த ரயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும். இந்நிலையில், வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க, 2019ல், ரயில்வே எல்லையில் பாலம் அமைக்கப்பட்டது. சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின்கீழ், 67.95 கோடி ரூபாயில், ரயில்வே மேம்பாலத்திற்கு இருபுறமும் இணைப்பு சாலை அமைக்கும் பணிகள், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் துவக்கப்பட்டன. நடப்பாண்டு ஜூன் மாதம் முடிந்திருக்க வேண்டிய நிலையில், இணைப்பு சாலை பணி மந்தமாக நடந்து வருகிறது. தற்போது, துாண்கள் அமைக்கப்பட்டு, அதன் மீது கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் முடிவடைய, இன்னும் ஆறு மாதங்களாகும் எனக் கூறப்படுகிறது. இதனால், வாகனங்கள் ரயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்திருப்பதும் தொடர்கிறது. பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு, அதில் மழைநீர் தேங்கி சகதியாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். நடந்து செல்லும் மக்களும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் குறித்த நேரத்தில் பணிகளுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். எனவே, மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், அங்குள்ள சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை