அக்னி நட்சத்திரத்தை குளிர்வித்த திடீர் மழையால் மக்கள் உற்சாகம்
கடந்த சில தினங்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று துவங்கிய அக்னி நட்சத்திரம், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என, மக்கள் அச்சத்தில் இருந்தனர். கும்மிடிப்பூண்டியில் வழக்கம்போல், நேற்று பகல் நேரத்தில் வெயில் அதிகரித்து காணப்பட்டது.மதியத்திற்கு பின் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து, பலத்த காற்று வீசியது. பின், இடி, மின்னலுடன் மழை பெய்ய துவங்கியது. ஒரு மணி நேரம் பெய்த மழையால், குளிர்ந்த வானிலை நிலவியது. ஊத்துக்கோட்டை
ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், மதியம் 2:00 மணிக்கு மேல் காற்று வீச துவங்கியது. பின், மழை பெய்ய துவங்கியது. முன்னெச்சரிக்கையாக, ஊத்துக்கோட்டை துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.இதனால், சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. திருத்தணி
திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், மாலை 3:00 - 4:00 மணி வரை மழை பெய்தது. இதனால், அனல் காற்று இல்லாமல் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், மழையால் சாலையோரம் பள்ளங்களில் மழைநீர் தேங்கியது.
மின் கம்பிகள் மீது விழுந்த பேனர்
கவரைப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லுாரி எதிரே, தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தனியார் கட்டடத்தின் மீது பெரிய அளவிலான இரும்பு சட்டங்களில், இரு விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.கும்மிடிப்பூண்டி பகுதியில், நேற்று மதியம் காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, மேற்கண்ட பேனர்களின் ஒன்று காற்றில் பறந்து வந்து, அருகில் உள்ள மின் கம்பிகள் மீது விழுந்தது. அதற்கு முன், மின் நிறுத்தம் செய்யப்பட்டதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. மின் பாதையில் பேனர் விழுந்தது தெரியாமல், மழை விட்டதும், மின் இணைப்பு கொடுத்த போது 'டிரிப்' ஆனது. பின், மின் பாதையில் உள்ள பேனரை கவரைப்பேட்டை உதவி மின் பொறியாளர் அலுவலகத்தினர் அகற்றினர். அதன்பின், மின் வினியோகம் செய்யப்பட்டது. விதிகள் மீறி அலட்சியமாக பேனர் வைத்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் தெரிவித்தனர் - நமது நிருபர் -