உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழிற்சாலை ரசாயன கழிவுகளால் மணலியில் மக்கள் தவிப்பு பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்

தொழிற்சாலை ரசாயன கழிவுகளால் மணலியில் மக்கள் தவிப்பு பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்

மணலி: மணலியில் செயல்படும் நுாற்றுக்கணக்கான ரசாயன தொழிற்சாலைகளால், அப்பகுதியில் வசிப்போருக்கு தோல் நோய், கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால், மணலியில் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டும் என, மணலி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மணலி மண்டலத்தில், எண்ணெய் சுத்திகரிப்பு, கிரீஸ், ஆக்சிஜன், உரம் தயாரிப்பு உட்பட நுாற்றுக்கணக்கா ன ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் இருந்து வெளியேறும் மாசு காரணமாக, மணலியில் வசிக்கும் 1.50 லட்சம் பேர் கடுமையான பாதிப்பை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, அதிகாலை நேரத்தில் காற்றில் கலக்கும் நச்சுக்காற்றால், பலருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, மணலி விரைவு சாலை, பொன்னேரி நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மழைக்காலத்தில் வெள்ளம் பெருக்கெடுக்கும்போது, நிறுவனங்களின் ஆயில் கழிவுகளும் அதில் சேர்ந்து, குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைகளை சூழ்கிறது. இதன் காரணமாக, மணலி முழுதும் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டுள்ளது. அந்த தண்ணீரை பயன்படுத்தும் பலருக்கும், தோல் நோய் ஏற்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனை மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் தோல் நோய்க்கு பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கண் பார்வை பாதிப்பு சம்பந்தமாகவும் பலரும் மருத்துவமனை செல்கின்றனர். கடந்த 2023, டிசம்பர் மாதம், எண்ணுாரில், அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்டபோது, உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் குவிந்தனர். இது போன்ற ஆபத்தான நேரங்களில், உடனடியாக சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள், மணலியில் போதிய அளவு இல்லாததால் பல சிக்கல் ஏற்படுகிறது. நுாற்றுக்கணக்கான ரசாயன தொழிற்சாலைகள் செயல்படும் மணலியில், 'மல்டி ஸ்பெஷாலிட்டி' எனும் பல்நோக்கு மருத்துவமனை இல்லாதது, அப்பகுதியில் வசிப்போரை வஞ்சிப்பதாகவே உள்ளது. தொழிற்சாலைகள், சி.எஸ்.ஆர்., எனும் சமூக பொறுப்பு நிதியின் கீழ், சிறிய அளவிலான மருத்துவ முகாம்களை மட்டுமே நடத்தி கணக்கு காட்டுகின்றன. அதற்கு பதில், கோடிக்கணக்கில் செலவிடப்படும் சி.எஸ்.ஆர்., நிதியை மாநகராட்சி பெற்று, மணலியில் பல்நோக்கு மருத்துவமனை கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து மணலியைச் சேர்ந்த சமூகஆர்வலர் எஸ்.ஆனந்த், 45, கூறியதாவது: தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மாசால், மணலி மக்கள் தினமும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நிலம், நீர், காற்று உள்ளிட்டவற்றில் கலக்கும் ரசாயனத்தால், பலருக்கும் தோல் நோய் ஏற்பட்டு வருகிறது. தவிர, புற்றுநோய் பாதிப்பிற்கும் ஆளாகின்றனர். தொழிற்சாலைகள், மருத்துவ முகாம்களை அவ்வப்போது பெயரளவிற்கு மட்டும் நடத்துவதற்கு பதில், அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில், பல்நோக்கு மருத்துவமனையை, மணலியில் கட்ட உதவ வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ