மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் 10,000 நாவல் மரக்கன்றுகள் நடல்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், 10,000 நாவல் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் துவக்கி வைத்தார். திருவள்ளுர் மாவட்ட பெருந்திட்ட வளாகம் மற்றும் அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், நேற்று வனத்துறை சார்பில், பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு, நாவல் மரத்தை கொண்டாடும் வகையில், 10,000 நாவல் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் பிரதாப் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மருத்துவ கல்லுாரி மாணவர்கள், வனத்துறை பணியாளர் மற்றும் மக்கள் பங்கேற்றனர். இதில், கலெக்டர் பிரதாப் பேசியதாவது: மாவட்டம் முழுதும், வனப்பகுதி மற்றும் வருவாய் நிலங்களில், 10,000 நாவல் செடிகள் நடப்பட்டு வருகின்றன. மாவட்டத்தை பசுமையாக்க, 10 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதற்கட்டமாக, இன்று பசுமை தமிழ்நாடு இயக்க நாளன்று நாவல் மரங்கள் நடப்பட்டு, மரம் நடும் விழா துவக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், வனத்துறை சார்பில் பள்ளிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியரை பாராட்டி, கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.