சொத்து தகராறு: மாமியார் கழுத்தை அறுத்த மருமகன்
திருத்தணி: திருத்தணி ஒன்றியம் கே.வி.என்.கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ், 47. அரசு பேருந்து ஓட்டுனர். இவர் மனைவி அம்பிகா. கருத்து வேறுபாடால் பிரிந்துள்ளனர்.இந்நிலையில் அம்பிகாவின் தாய் கண்ணம்மா ,66 என்பவரின் சொத்து பிரிப்பதில், பிரகாஷ் குடும்பத்தினருக்கும், கண்ணம்மா குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.நேற்று முன்தினம், பிரச்சனைக்குரிய இடத்தை கண்ணம்மா ஆட்கள் வைத்து சீர் செய்து வந்தார். தகவல் அறிந்ததும் பிரகாஷ் வந்து சீரமைப்பு பணிகளை நிறுத்த வேண்டும் என மாமியாரிடம் கூறினார். இதனால், மாமியார், மருமகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த, பிரகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால், மாமியாரின் கழுத்தை அறுத்தார். இதில் படுகாயமடைந்த கண்ணம்மாவை உறவினர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கண்ணம்மா உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்த பிரகாஷ் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.