குளமாக மாறிய கல்குவாரி பள்ளம் எச்சரிக்கை பலகை அவசியம்
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் ஏராளமான மலைகள் உள்ளன. ஆர்.கே.பேட்டை அடுத்த காந்தகிரி மலையடிவாரம், எஸ்.கே.வி.கண்டிகை, பத்மாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கல்குவாரிகள் செயல்பட்டு வந்தன.பாறை வெட்டி எடுக்கப்பட்டதால், கரடுமுரடான பாறைகளின் எஞ்சிய முகப்புகள் இந்த குவாரிகளில் உள்ளன. அனுமதிக்கப்பட்ட அளவு பாறை வெட்டி எடுக்கப்பட்ட நிலையில், இந்த குவாரிகள் தற்போது செயல்பாட்டில் இருந்து கைவிடப்பட்டுள்ளன. பாறை வெட்டி எடுக்கப்பட்டாதால், இந்த குவாரிகளில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதில், மழைநீர் தேங்கியுள்ளது. முற்றிலும் பாறையால் அமைந்துள்ள இந்த குட்டைகளில் தண்ணீர் உறிஞ்சப்படுவது இல்லை.இதனால், ஆண்டு முழுதும் தண்ணீர் நிரம்பியே காணப்படுகின்றன. இதில், ஆகாயத்தாமரை செடிகள் ஏராளமாக வளர்ந்துள்ளன. இந்த குவாரிகள் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், ஆபத்தை உணராத சிறுவர்கள் நீச்சல் பழக வந்து செல்கின்றனர். எனவே, குவாரியின் அபாயநிலை குறித்து, அந்த பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.