ரயில்வே வாரிய தேர்வு பயிற்சி வகுப்பு துவக்கம்
திருவள்ளூர்: திருவள்ளூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், ரயில்வே வாரிய தேர்வுக்கு பயிற்சி வகுப்பு நாளை துவங்க உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில்வே வாரியத்தின் குரூப்- - 4 தேர்விற்கு, பல்வேறு பணிகளிலுள்ள, 22,195 காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு கல்வி தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி வழியாக தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு இணைய வழியாக, மார்ச் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்களுக்காக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை துவங்க உள்ளது. பயிற்சி வகுப்புகள், சிறந்த பயிற்றுநர்களை கொண்டு, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை, காலை 10:30 - மாலை 4:00 மணி வரை நடைபெறும். இலவச மாதிரி தேர்வுகளும், மாநில அளவிலான முழுமாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன. மேலும் விபரங்களுக்கு, 84898 66698, 96264 56509 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.