வடிகால்வாய் வசதி இல்லாததால் நெடுஞ்சாலையில் மழைநீர் தேக்கம்
திருவாலங்காடு: மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், மாநில நெடுஞ்சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டு, கனகம்மாசத்திரம், தக்கோலம், திருவாலங்காடு, பேரம்பாக்கம், ஆற்காடுகுப்பம், நல்லாட்டூர், மணவூர் உட்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள 100 கி.மீ., சாலையை, மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரித்து வருகிறது. இச்சாலையில் ஆற்காடுகுப்பம், சின்னம்மாபேட்டை, திருவாலங்காடு உள்ளிட்ட பகுதிகளில், ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருவதுடன், சாலை விரைவில் சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஆற்காடுகுப்பம், திருவாலங்காடு, சின்னம்மாபேட்டை நெடுஞ்சாலையில் மழைநீர் வெளியேற வழியில்லை. சாலையின் இரண்டு பக்கமும் வீட்டின் உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள் மண்ணை போட்டு மேடாக்கி வைத்துள்ளனர். மேலும், லேசான மழைக்கே கழிவுநீரோடு மழைநீர் தேங்குகிறது. இதனால், சாலை சேதமடையும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாய் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.