திருப்போரூரில் ரியல் எஸ்டேட் தொழில் அமோகம் சுற்றுப்பகுதி கிராமங்களிலும் நிலத்தின் மதிப்பு உயர்வு
திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியத்தில் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்துள்ள நிலையில், இங்கு சாமானியர்கள் இடம் வாங்குவது எட்டாக்கனியாக மாறியுள்ளது. சுற்றுப்பகுதி கிராமங்களிலும் நிலத்தின் மதிப்பு உயர்ந்து வருவது, நடுத்தர மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், அசுர வளர்ச்சியடைந்து வருகிறது. இங்கு ஓ.எம்.ஆர்., சாலை, இ.சி.ஆர்., சாலை, கேளம்பாக்கம் - வண்டலுார் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், பல அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், புதிய மனைப் பிரிவுகள் உள்ளன. ஓ.எம்.ஆர்., சாலையில் நாவலுார் முதல் பையனுார் வரை ஐ.டி., நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அதி க அளவில் உள்ளன. உள்ளூர் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து, மேற்கண்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில், ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். இப்பகுதிகளில் இருந்து சென்னை நகருக்குச் செல்ல கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் உள்ளன. இதனால், சென்னை போன்ற பகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள் முதலீடுக்காக, திருப்போரூர் ஒன்றிய பகுதிகளைத் தேர்வு செய்து, இடம் வாங்கி முதலீடு செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் சிறிய கட்டுமான நிறுவனங்கள் முதல், முன்னணி பெரிய கட்டுமான நிறுவனங்கள் வரை, போட்டி போட்டுக் கொண்டு, புதிய மனைப் பிரிவுகள் மற்றும் அடுக்குமாடி கட்டடங்களை உருவாக்கி, மக்களை ஈர்த்து வருகின்றன. திருப் போரூர், கேளம்பாக்கம், நாவலுார் உள்ளிட்ட பகுதிகளில் மனை மற்றும் அடுக்குமாடி வீடுகளின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதால், இங்கு சாமானிய மக்களால் மனை, வீடுகள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டியுள்ள இடங்களின் அமைவிடத்தைப் பொறுத்து, சதுர அடி இடம் 2,000 முதல் 10,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒரு சென்ட் கணக்கில், 9 லட்சம் முதல் 44 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகிறது. அதேபோல், அடுக்குமாடி குடியிருப்பு, இரண்டு தளங்கள் கொண்ட 'வில்லா' வீடுகள், உயர் சொகுசு அடுக்குமாடி வீடுகள், குறைந்தபட்சம் 20 லட்சம் ரூபாய் முதல் 3.50 கோடி ரூபாய் வரை விலை போகின்றன. ஓ.எம்.ஆர்., சாலையைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், நிலங்களின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள், ரியல் எஸ்டேட் தொழில் தீவிரமடைந்து வந்தாலும், விலைவாசி அதிகரிப்பு காரணமாக நிலம் வாங்கி சொந்த வீடு கட்டுவது நடுத்தர, சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறி வருகிறது.
அரசுக்கு நல்ல வருமானம்
பத்திரப்பதிவு ஆவண எழுத்தர்கள் கூறியதாவது: சென்னையில் வசிப்பவர்களில் அதிகமானோர் தற்போது, திருப்போரூர் சுற்றுவட்டார பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றனர். இங்கு, தகுதிக்கேற்ப துாய்மைப் பணி முதல் ஐ.டி., பணி வரை கிடைக்கிறது. இதனால், ஓ.எம்.ஆர்., சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில் குடியேற நினைக்கும் பலர், மனை, அடுக்குமாடி வீடுகள் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். விற்பனை அதிகரித்து வருவதால், விலையும் பலமடங்கு அதிகரித்து, ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்துள்ளது. திருப்போரூர் தாலுகா, ஒன்றிய பகுதிகளில், ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட பத்திரப் பதிவுகள் நடக்கின்றன. மாதத்தில் 2,000க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவுகள் நடக்கின்றன. அதேபோல், இடத்தின் மதிப்பைப் பொறுத்து ஒரு பத்திரப் பதிவிற்கு, 20,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை, அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இடைத்தரகர்களுக்கு நிலம் விற்பவர்கள் ௨ சதவீதமும், நிலம் வாங்குவோர் ௧ சதவீதமும் விற்பனை தொகையிலிருந்து, 'கமிஷன்' கொடுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.