சார்- பதிவாளர் அலுவலக இணையதள சேவை துண்டிப்பு: பத்திர பதிவு பாதிப்பு
திருவள்ளூர்;திருவள்ளூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் நேற்று, இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவுக்காக காத்திருந்தனர். திருவள்ளூர் சார் - பதிவாளர் அலுவலம், தாலுகா அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. இங்கு, திருவள்ளூர், பாண்டூர், காக்களூர், வேப்பம்பட்டு, பாக்கம், வெள்ளியூர், செவ்வாப்பேட்டை உட்பட 76 கிராமங்களைச் சேர்ந்தோர், நிலம் விற்பனை உள்ளிட்ட பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். தினமும், சராசரியாக 250 பத்திரப்பதிவு இந்த அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. முகூர்த்த நாட்களில் அந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதையடுத்து, பத்திரப்பதிவு துறை, திருவள்ளூர், ஈக்காடு, பாண்டூர் உள்ளிட்ட 40 கிராமங்களை ஒரு பிரிவாகவும், பெருமாள்பட்டு, பாக்கம், வெள்ளியூர் உட்பட 36 கிராமங்களைக் கொண்ட மற்றொரு பிரிவாகவும் பிரித்து தனித்தனி பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஒரே இடத்தில், இரண்டு பதிவு அலுவலகம் செயல்பட்டு வருவதால், நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை பத்திரப்பதிவு செய்வதற்காக, இரண்டு அலுவலகங்களிலும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் 'டோக்கன்' பெற்று, காத்திருந்தனர். ஆனால், இணையதள சேவை துண்டிக்கப்பட்டதால், பத்திரங்கள் பதிவு செய்ய முடியாமல், அதிகாரிகள் சிரமப்பட்டனர். இதன் காரணமாக, பத்திரப்பதிவு அலுவலகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோர், மணிக்கணக்கில் காத்திருந்தனர். மேலும், மின்சாரம் இல்லாமல், அலுவலகம் இருளில் மூழ்கியது. இதுகுறித்து, பத்திரப்பதிவுக்காக வந்திருந்தவர்கள் கூறியதாவது: ஏற்கனவே, கடந்த, 27ம் தேதி பத்திரம் பதிவு செய்ய டோக்கன் பெற்றோம். ஆனால், இணையதளம் சேவை அடிக்கடி துண்டிக்கப்பட்டதால், அன்றைய தினம் ஏராளமானோர் பத்திரம் பதிவு செய்ய இயலவில்லை. இந்நிலையில், நேற்று பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு, கடந்த சனிக்கிழமை வந்தவர்களுடன், நேற்றும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரம் பதிவு செய்ய, டோக்கன் பெற்றோம். ஆனால், இணையதளம் வேலை செய்யாததால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.